“தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்’’ என விமர்சித்துள்ளார் செந்தில் பாலாஜி.
தமிழக மின்சாரம் மற்றும் மது விலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்.
எடப்பாயி பழனிசாமி அவர்கள் தனிப்பட்ட வகையில் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்ற கணக்கை கூட விட்டுவிடலாம்; தனது பதவி நிலைத்திருக்க வேண்டும் எனும் சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடமானம் வைத்தார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்.
புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாவற்றையும் எந்தவொரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி எப்படியான அரசியல் வியாபாரி என்பது அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிக நன்றாக தெரியும். அடிமைக் கூட்டத்திற்கு லாவணி பாடாதவர்களுக்கு எல்லாம் ஏதாவது ஒரு முத்திரை குத்தி அவர்களைக் காலி செய்வதற்காக எந்தவொரு லாபியும் செய்யத் தயங்காத பதவி வியாபாரி எடப்பாடி பழனிசாமி மற்றவர்களைப் பார்த்து வியாபாரி என்று சொல்வதுதான் நகைமுரண்” எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று எடப்பாடி பழனிச்சாமி, ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ”அமைதிப்படை அமாவாசை என்பது அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தான் பொருந்தும். 5 கட்சிக்கு போய் வந்தவர் அவர் தான். ஒரே 5 ஆண்டில் இரண்டு கட்சிகளின் சின்னத்தில் நின்ற பெருமைக்குரியவர் அவர்தான். இதையெல்லாம் மறந்து பேசுகிறார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, திமுக தலைவர் கருணாநிதி பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி பேசியது சட்டசபைக் குறிப்பில் இருக்கிறது. யாராலும் நீக்கவே முடியாது. இன்னொரு அமைச்சர் சேகர்பாபு. அவரும் அமாவாசை பற்றி பேசி வருகிறார். நான் அமாவாசையை பற்றி பேசுவது உண்மைதானே. ஒவ்வொரு மாதமும் கழிய கழிய திமுக ஆட்சியின் முடிவும் நெருங்கி வருகிறது” என அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்து இருந்தார்.