Homeசெய்திகள்அரசியல்முதல்வர் குறித்து அவதூறு - அதிமுகவினர் மீது வழக்கு

முதல்வர் குறித்து அவதூறு – அதிமுகவினர் மீது வழக்கு

-

எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எல்.இ.டி. திரை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பற்றி அவதூறான கருத்துக்கள் ஒளிபரப்பு செய்த அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தண்டையார்பேட்டை ரெட்டை குழி தெரு – சேணியம்மன் கோயில் தெரு சந்திப்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி.கே.பழனிச்சாமி இதில் பங்கேற்று பேசினார். எடப்பாடி பழனிச்சாமி வருகையையொட்டி திருவொற்றியூர் நெடுஞ்சாலை ரோடு மகாராணி திரையரங்கம் முதல் தண்டையார்பேட்டை காவல் நிலையம் வரை சாலையின் இருபுறங்களிலும் அதிமுக கட்சி பதாகைகளை ஆபத்தான முறையில் வைத்திருந்தனர்.

இந்த கட்சி பதாகைகள் வைப்பதற்கு சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெறவில்லை.

மேலும், அனுமதியில்லாமல் LED திரைகளை வைத்து அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி அவர்களைப் பற்றி அதிமுகவுக்கு சம்மந்தமில்லாத 1. சவுக்கு சங்கர் 2. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாள் 3. பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ஆகியோர் ஏற்கனவே பேசிய உறுதிப்படுத்தப்படாத பொய் செய்திகளை ஒளிபரப்பு செய்துள்ளனர்.

இந்த நிகழ்வு சட்டத்துக்கு புறம்பானது என்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கும் முயற்சி என திமுக வட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 143 ன் கீழ் சட்டவிரோதமாக கூடுதல், 285 ன் கீழ் தீப்பற்றக்கூடிய பொருட்களை கவனக் குறைவாக கையாளுதல், 290 ன் கீழ் பொது தொல்லை( பப்ளிக் நியூசன்ஸ்), 336 ன் கீழ்  மற்றவர்களின் உயிருக்கு அபாயம் விளைவிக்கும் செயல், 505(2)- இரு பிரிவினரிடையே பகைமையை உண்டாக்கும் வகையில் வதந்தி பேச்சு, அறிக்கை அல்லது பீதி உண்டு பண்ணும் செய்தியை வெளியிடுதல்- பரப்புதல், மாநகர காவல் சட்ட பிரிவுகள் என மொத்தம் பத்து பிரிவுகளில் தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ், ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் சீனிவாச பாலாஜி, வட்ட செயலாளர் அன்பு உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

MUST READ