”திமுகவை அழிக்க நினைத்தவர்கள் மண்ணோடு மண்ணாக போனதுதான் வரலாறு அண்ணாமலையால் அறிவாலயத்தை நெருங்க கூட முடியாது” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
”நான் தலைவராக தொடர்ந்து இருக்க முடியாது என்பது எனக்கு தெரியும். இந்தப் பதவியிலிருந்து செல்லும் முன்பு அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விட மாட்டேன்” என்று அண்ணாமலை பேசி இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் சேகர் பாபு, ”திமுகவை தொட்டுப்பார்க்க நினைத்தால் அவர்கள் அடங்கி மண்ணோடு மண்ணாகத்தான் போவார்கள். எப்பொழுதெல்லாம் திமுகவை அழிக்க வேண்டும் என்று புறப்படுகிறார்களோ… எப்போதெல்லாம் திமுகவை அழிப்பேன் என்று கூறுகிறார்களோ அவர்களது அழிவிற்கு தொடக்கப்பள்ளி தான் அது என்பது பொருள். திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் இந்த இயக்கத்தில் உள்ள தொண்டன் முதல் தலைவர்கள் வரை உணர்வால் பின்னிப் பிணைந்தவர்கள்.
தமிழ்நாட்டிலே பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, அரசியலை கரைத்துக் குடித்தவர்கள் திமுகவினர். மற்றவர்களைப் போல் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல. திமுகவில் உள்ளவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆலயமாக கருதப்படுகிறது அறிவாலயம். தொட்டுக்கூட பார்க்க முடியாது. அவர் அறிவாலயத்தை நெருங்க கூட முடியாது. இரும்பு மனிதர் என்று போற்றப்படுகிற மாண்புமிகு தமிழர் தமிழக முதல்வர் அவர்கள், 75 ஆண்டுகள் கடந்து இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்து பார்ப்பதற்கு இன்னொருவர் பிறந்து வர வேண்டும்.
அண்ணாமலையின் ஆணவப் பேச்சுக்கு தமிழக மக்கள் 2026 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் மிருக பலத்தோடு பதிலடி கொடுப்பார்கள். மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திமுகவை ஆட்சியில் அமர வைப்பார். முதலில் 2026 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற தேர்தலில் ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை அண்ணாமலை மேற்கொள்ள வேண்டும்.
அவர் தமிழ்நாட்டில் எங்கு நின்றாலும் அவரை புறமுதுகிட்டு ஓடச் செய்ய திராவிட முன்னேற்ற கழக கடைக்கோடி தொண்டனை நிற்க வைத்து அண்ணாமலையை மண்ணைக் கவ்வ வைப்போம்” என தெரிவித்துள்ளார்.