சிவகாசியில் நடந்த அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடும் தோரணையில் கே.டி ராஜேந்திர பாலாஜி பேசியது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
சிவகாசியில் நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேசும்போது, விருதுநகர்மாவட்டச் செயலாளராக நான் இருக்கும்போது பல கட்சிக்கு சென்று விட்டு வந்தவருக்கு (மாபா பாண்டியராஜன்) பொன்னாடை போர்த்தினால் நான் எப்படி சும்மா விடுவேன்? கட்சியை காட்டிக் கொடுத்தவர் மஃபா பாண்டியராஜன். எனக்கு வரலாறு உள்ளது உனக்கு என்ன வரலாறு இருக்கு?
நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் ஒன்றும் கிறுக்கன், பைத்தியக்காரன் அல்ல, தொலைத்துவிடுவேன். நான் அதிமுகவில் குறுநில மன்னர்தான். எனக்கு பின்னால் உள்ள அதிமுக தொண்டர்கள் அனைவரும் வாள் ஏந்திய படை வீரர்கள்.என்னைப் பற்றி பேச வேண்டுமானால் விருதுநகரில் வைத்து பேச வேண்டும். சென்னையில் சென்று ஏன் பேசுகிறாய் ?
விருதுநகரில் என்னை மீறி எதுவும் செய்ய முடியாது. எடப்பாடி பழனிச்சாமிக்கு அரிவாள், துப்பாக்கி வந்தாலும் எதிர்த்து நின்று தாங்கி நிற்பேன். உன்னால் முடியுமா? அதிமுகவை வாழவைக்க எந்த நிலைமைக்கும் நான் செல்வேன். எம்ஜிஆரின் கையைப் பிடித்து, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டும் கட்டுப்படுவேன்.
வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் அதிமுகவில் இயக்கத்தில்தான் இருப்பேன். எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து குழி பறிக்கும் வேலை நடைபெற்று வருகிறது. நான் சிபிஐக்கே பயப்படாதவன்.போகிற போக்கில் மிதித்து தள்ளிவிடுவேன்.எனக்குள் ஓடுவது அதிமுக ரத்தம். உனக்குள் ஓடுவது என்ன ரத்தம்? தடையாக இருந்தால் வெட்டி எறிந்து விடவும் தயங்க மாட்டேன்” என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.