நீங்கள் எவ்வளவு தான் சத்தமிட்டாலும் தமிழ்நாட்டில் அரசியலும் ஆன்மீகமும் ஒன்றாக கலக்காது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தூர்தர்ஷனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் “திராவிட நல்” என்ற வார்த்தையை தவிர்த்து விட்டு பாடியுள்ளனர். அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவிதான் காரணம் என்று முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர், துணை முதலமைச்சர் ஆகிய எல்லோரும் கண்டித்தனர்.
இதற்கு தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நேரடியாக பிரச்சினை குறித்து பேசாமல், ஆளுநர் செய்ததை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.
அதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் தமிழிசைக்கு பதிலளித்துள்ளார்.
இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது!
அக்கா அவர்களே, திருவண்ணாமலையில் ’கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ’சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல – ‘சரி’ வலம்!
ஓடாதத் தேரை ஓட வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!
ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணிச் செய்தவர் எங்கள் முதல்வர்!
‘எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும். நியாயம் தானே…!
நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது.
ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் – அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.