”இந்தியாவின் முதன்மை பொறுப்பில் உள்ள மோடி அவரது நாட்டு குடிகளை விலங்கிட்டு அமெரிக்கா திருப்பி அனுப்பியது மோடிக்கு இட்ட விலங்காக தான் பார்க்க வேண்டும்.” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அவிநாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இந்தியாவின் முதன்மை பொறுப்பில் உள்ள மோடி அவரது நாட்டு குடிகளை விலங்கிட்டு திருப்பி அனுப்பியது மோடிக்கு இட்ட விலங்காக தான் பார்க்க வேண்டும். அதை குறியீடாக வைத்து கருத்து படத்தை விகடன் வெளியிட்டது. அதையே தாங்க முடியவில்லை என்றால் இந்த நாட்டு குடிகளை வலுக்கட்டாயமாக கைவிலங்கு போட்டு திருப்பி அனுப்பியதை விடவா இது அசிங்கமாக போய்விட்டது. சுதந்திரம் என்பதற்கு எந்த கருத்தும் இல்லை.
அண்ணாமலை விகடனை எச்சரித்ததாக சொல்கிறார். ட்ரம்பை எச்சரிக்க வேண்டியது தானே? நாங்களும் அண்ணாமலையை எச்சரிக்கின்றோம். அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆடாதீர்கள் என எச்சரிக்கிறேன். நாற்காலி நிரந்தரமானது அல்ல. மேலே இருப்பது கீழே வரும், கீழே இருப்பது மேலே வரும். வரலாறு காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும்.இது ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல.
ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதியை வழங்காத செயல் தொடரும்போது தேசியம் என்பது இருக்குமா? இந்தியா ஒரு தேசியமா? பல மாநிலங்களின் ஒன்றியம் இது. பல மொழி பேசும் இன மக்கள் வாழும் இந்த நாட்டில் ஒவ்வொரு மொழிக்கும் கலை, கலாச்சாரம், மொழி, வழிபாடு இவை வெவ்வேறாக உள்ளது. ஒரே இனமான தமிழகத்திற்குள் பல்வேறு சாதி குடி கட்டமைப்புகள் உள்ளன.
அனைத்து மக்களின் மொழி வழி தேசியத்திற்கும் முன்னுரிமை தரப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை தரப்பட வேண்டும் என அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். மும்மொழி கொள்கை அதில் என்ன இருக்கிறது? பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மனமுதிர்ச்சி இல்லை. நீட் தேர்வு அச்சத்தில் உயிரிழக்கின்றனர்.
முதிர்ச்சியற்ற நிலையில் மாணவர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளில் பொது தேர்வு கொண்டு வருவது எப்படி ஏற்க முடியும்? புதிய கல்விக் கொள்கை கட்டாய இந்தி மொழியை சொல்கிறது. பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும் தேர்வு வைத்து தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் ஏற்றுக் கொள்வார்களா.?
பல மொழி இனத்தை அழித்து ஒரே தேசமாக கட்டமைக்க முயற்சி நடக்கிறது. இந்தியாவில் 22 மொழிகள் ஆட்சி மொழியாக இருந்தால் என்ன? வரியை மட்டும் பெற்றுக் கொள்கின்றனர்? ஆனால் அங்கிருந்து கடிதம் அனுப்பும்போது இந்தியில் அனுப்புகின்றனர்? அவ்வளவு ரோஷம் இருப்பவர்கள் தமிழ்நாட்டின் வரியை ஏன் பெறுகிறீர்கள்?
நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து வரி வருவாயை தரக் கூடாது உடனடியாக அமைச்சரவையையும், சட்டசபையையும் கூட்டி இந்த முடிவை எடுக்க வேண்டும். வெள்ளைக்கார ஆட்சியில் தான் வரி கொடுக்கா போராட்டம் நடத்த வேண்டுமா? இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும். இதுபோன்று தீர்மானங்களை போடாமல் தமிழ்நாட்டில் புலம்பி கொண்டு இருக்கின்றனர். இதுபோன்று தீர்மானம் போட்டால் அவர்களின் வீட்டில் வருமான வரித்துறை அமலாக்கத்துறை சோதனைக்காக நிற்கும்” என அவர் தெரிவித்தார்.