இந்தியாவின் பிரதமராக மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் என்ன தவறு என்று தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது.
பிரதமர் மோடி, அரசியல் நாகரிகமின்றிப் பேசுகிறார். தோல்வி பயத்தால் ஜன்னி வந்தவர் மாதிரி பேசுகிறார். தேர்தலில் வெற்றி தோல்வியைவிட, அறிவு நாணயமும், அரசியல் நாகரிகமும் முக்கியமானது. நாட்டில் ஜனநாயகம் பொலிவு பெற, பி.ஜே.பி.யையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் வாக்காளப் பெருமக்கள் புறக்கணித்து நல்ல அளவுக்குத் தோல்வியைக் கொடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவரது கட்சியினரின் தேர்தல் பிரச்சாரம், அதன் ஏழு கட்டங்களிலும் ஒவ்வொரு கட்டம் முடிந்து இறுதிக் கட்டங்களை நோக்கிடும் நிலையில், அவர்களது ‘‘400 கனவு’’ ஒருபோதும் நனவாகாது என்பதோடு, நாளுக்கு நாள் அவரது 10 ஆண்டுகால ஆட்சியின் அவலங்களை மக்கள் நன்கு புரிந்துகொண்டு, மோடி ஆட்சிக்கு வழியனுப்பு விழா நடத்த வட மாநிலங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள வாக்காளர்கள் தயாராகி விட்டனர். வாக்காளர்களும் 5 கட்டங்களில் பா.ஜ.க.விற்கு எதிராக வாக்காளித்துள்ளனர்.
இந்தத் தோல்வியைத் தெளிவாக பா.ஜ.க.வும், அதன் பிரதான பரப்புரையாளரான பிரதமர் மோடியும் நன்கு புரிந்துகொண்டதால், நிலைகுலைந்து, ஜன்னி கண்ட நோயாளி பிதற்றுவதுபோல, உச்சவரம்பின்றி பொய்ப் பிரச்சாரங்களில் முற்றிலும் தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக அவதூறு பேச்சினை, வெறுப்புரைகளை நாளும் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டுள்ளனர்.
அதன்படியே, தமிழ்நாட்டினர் ‘திருடர்கள்’ என்று நாக்கில் நரம்பின்றி, வாக்கில் நேர்மையின்றி ஒடிசாவில் பேசியுள்ளார் பிரமதர் மோடி.
ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்!
‘‘ஒரு பிரதமர் பேசும் பேச்சா?’’ என்று நாகரிக உலகமே நாணித் தலைகுனியும். ஒடிசாவில் பூரி ஜெகன்னாதர் கோவிலில் ஓர் அறை பூட்டியே கிடக்கிறதாம், சாவி இல்லாமல். அச்சாவி தமிழ்நாட்டிற்குக் கொண்டு போகப் பட்டதாக ‘‘மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்று ஓர் அபத்தமான, அபாண்ட குற்றச்சாட்டினை தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்!தமிழ்நாட்டிற்கு ஒன்பது முறை வந்து பிரச்சாரம் செய்தபோது, தமிழ்மொழி, தமிழர்கள் பற்றியெல்லாம் உச்சிமேல் மெச்சி பேசிய பிரதமர் மோடி, இப்போது இப்படி ஒரு கேலிக் கூத்தான குற்றச்சாட்டைக் கூறுவது, அவரிடம் ஆக்கப்பூர்வ திட்டங்கள் குறித்துப் பேச ஏதுமில்லை – ‘மோடி கீ கியாரண்டி’ சாயம் வெளுத்துவிட்டது. எனவே, இப்படி நாலாந்தரப் பேச்சாளர் நிலைக்கு ஒரு பிரதமர் இறங்கிவிட்டார்!
தமிழ்நாடு முதலமைச்சரின் பதிலடி!
நமது ‘திராவிட மாடல்’ ஆட்சி நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இதற்குரிய சரியான கண்டனத்தை ‘சுரீர்’ என்று தைக்கும்படி ஓர் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளார்!
தமிழ்நாட்டின் கண்டனக் கணைகளை பல லட்சக்கணக்கில் பிரதமருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவரது சர்வ வல்லமை படைத்த உளவுத் துறை மூலம் அவர் கண்டறிந்து, சாவியை மீட்கலாமே! ஏன் அவர் அதனைச் செய்யவில்லை?
‘‘மக்கள் பேசிக் கொள்கிறார்கள்’’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி, யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் எழுதலாம்; பேசலாமே. அது அவர்கள் பக்கம் திரும்ப ஆரம்பித்தால், நாட்டின் பொதுவாழ்வின் நாகரிகம் காற்றில் பறந்துவிடுமே!
ஏன், ஸ்டாலின் பிரதமர் ஆகக் கூடாதா?
‘‘இந்தியா கூட்டணிக்கு ஓட்டளித்தால், ஸ்டாலின் ஆள வந்துவிடுவார்’’ என்றும் இந்த ‘24 கேரட் தேச பக்தர்’ பேசுவது எந்த அடிப்படையில்? அப்படியே, மு.க.ஸ்டாலின் ஆண்டால்தான் என்ன தவறு? அவரது ஆட்சியின் திட்டங்கள், மற்ற இந்திய மாநிலங்கள் மட்டுமல்ல; கனடா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளும் பின்பற்றி, அத்திட்டத்தை செயல்படுத்துகிறார்கள்!
உண்மையான தேச பக்தர்கள், ‘‘பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்’’ என்று கூறி, பெருமிதம் அல்லவா அடைவார்கள்!
தேர்தல் வெற்றி – தோல்வி என்பதைவிட, அறிவு நாணயமும், அரசியல் நாகரிகமும் முக்கியம் என்பதை உணரவேண்டாமா?
இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.