கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் முதலாவது தகுதி சுற்று கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் கடந்த 22ம் தேதி எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பெங்களூருvsராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் நேற்று முன் தினம் நடைபெற்ற இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் ராஜஸ்தான்VSஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தாVSஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணி பந்துவீசியது.. ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட்டும் ரன் ஏதுமின்றியும் அபிஷேக் ஷர்மா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 9 ரன்களிலும் ஏய்டன் மார்க்ராம் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பந்துவீச்சு தரப்பில் ஆந்தரே ரஸ்செல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் கொல்கத்தா அணி இரண்டாவது பேட்டிங் விளையாடவுள்ளது.