ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை, ஏப்ரல்-7 முதல் 17ம் தேதி வரை இறுதி தேர்வு நடைபெறும். கோடை வெப்பத்தின் தாக்கத்தால் முன்கூட்டியே இறுதித்தேர்வு நடைபெற்று விடுமுறை விடப்படும் என தொடக்கக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு / ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. வருகின்ற 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும்” என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சூழலில் முன்கூட்டியே தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோடை விடுமுறையும் முன்கூட்டியே தொடங்குகிறது.
மார்ச் மாதம் முதலே வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது ஏறக்குறைய தனியார் பள்ளிகள் எல்லாம் தேர்வை நடத்தி முடித்து விட்டன. கொளுத்தும் வெயிலில் ஏப்ரலில் தேர்வை நடத்துவதை அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிறது.