Homeசெய்திகள்தமிழ்நாடுஒரு ரூபாய் செலவில்லாமல் ஏழைகளுக்கு பட்டா; ஆவடியில் துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்

ஒரு ரூபாய் செலவில்லாமல் ஏழைகளுக்கு பட்டா; ஆவடியில் துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்

-

ஆவடியில் ஒரு ரூபாய் செலவில்லாமல் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆவடி இந்து கல்லூரியில் நடைபெற்ற பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது

நாடாளுமன்ற தேர்தல் போது உங்களிடம் வாக்கு கேட்டு வந்தேன். அப்போது உங்களிடம் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்று கூட்டணி கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை 5 லட்சத்து 72 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள்.

அதற்கு கைமாறாக இன்று இந்த மாவட்டத்தில் 17,427 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நேரில் வந்து என் கையால் வழங்குகிறேன்.
வீடு, பட்டா என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கனவு, அதை நிறைவேற்றுவது நமது திராவிட மாடல் அரசின் கடமை என்றார். அந்த கனவை மனதில் வைத்து கடந்த 1971 ம் ஆண்டு நமது கலைஞர் அவர்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் திட்டத்தை முதன்முதலில் கொண்டுவந்தார். அந்த திட்டத்தின் மூலம் லட்சக் கணக்கானோர் இன்றும் பயனடைந்து வருவதாக தெரிவித்தார்.

நிலத்தின் பல வகைப்பாட்டினால் பட்டா வழங்குவதில் நிறைய பிரச்சனை இருக்கிறது என்று முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதன் பின்னர் நிலப்பிரிவு மற்றும் அதில் உள்ள சிக்கல்களை ஆய்வு செய்து குறைகளை களைய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் வருவாய் துறை அமைச்சர், நான் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றோம். அதில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து தற்போது மாநிலம் முழுவதும் பட்டா வழங்கி வருவதாக துணை முதலமைச்சர் பேசினார்.

அதேபோன்று நமது முதலமைச்சர் கொண்டுவந்த பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம் என்று ஏராளமான திட்டங்கள் மூலம் இந்தியாவில் 13 துறைகளில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை பாராட்டி ஐநா விருது வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

MUST READ