தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் 100 டிகிரி பாரான்ஹீட்டுக்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்தது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 100 டிகிரி பாரான்ஹீட்டுக்கும் மேலாக வெப்பம் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100 டிகிரி பாரான்ஹீட்டுக்கும் மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் வாட்டி வதைத்து. அடுத்தபடியாக மதுரை நகரில் 104 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் கொளுத்தியது. நாகை, தஞ்சை மற்றும் ஈரோட்டில் தலா 102 டிகிரி பாரான்ஹீட்டும், சென்னை மீனம்பாக்கம், கருர் மாவட்டம் பரமத்தி, புதுச்சேரியில் தலா 101 டிகிரி பாரான்ஹீட்டும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதேபோல், நெல்லை பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, அதிராமபட்டினம், கடலூர், திருச்சியில் தலா 100 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனிடையே வரும் நாட்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது