சென்னை தியாகராயர்நகரில் மாநகராட்சிக்கு சொத்துவரி நிலுவை வைத்துள்ள 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள வீடுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கடைகள், நிறுவனங்களுக்கு வருடத்துக்கு இரண்டு முறை சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது.சென்னை மாநகராட்சியில், சுமார் 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் சொத்து வரி வசூலிப்பதால் மாநகராட்சிக்கு அரையாண்டுக்கு சுமார் ரூ.850 கோடி என்ற அளவில் ஆண்டுக்கு ரூ.1,700 கோடி வருவாய் கிடைக்கிறது.
குறிப்பிட்ட நாட்களுக்கு சொத்து வரியை செலுத்தாத உரிமையாளர்கள் கூடுதலாக 1% தனி வட்டியுடன் சொத்து வரி செலுத்த வேண்டும். அதேபோல, சொத்து வரி மற்றும் தொழில் வரியை கால தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தாத கடைகள் மற்றும் நீண்டகால வரி நிலுவை வைத்துள்ள கடைகளுக்கு மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.
குறிப்பாக, தி.நகர் டாக்டர் நாயர் தெருவில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள மொத்தம் 38 கடைகள் 90 லட்சம் வரி நிலுவை உள்ளது.
அதேபோல், ரங்கநாதன் தெருவில் உள்ள சண்முகா ஸ்டோர்ஸ் 35 லட்சம் பாக்கி சொத்து வரி நிலுவை வைத்துள்ளது.மொத்தம் 43 கடைகளில் இருந்து 1.5 கோடி ரூபாய் வரி நிலுவை உள்ளதால் குறிப்பிட்ட கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.