அரசு பள்ளி ஆசிரியையை மிரட்டிய திமுக நிர்வாகி- ஈபிஎஸ் கண்டனம்
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கியதாக எப்படி சொல்லலாம் என கேட்டு, புதுப்பட்டிணம் அரசு பள்ளி ஆசிரியையை மிரட்டிய திமுக நிர்வாகி சரவணன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “4.8.2023 அன்று கல்பாக்கம், புதுப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் பேசிய அப்பள்ளியின் தமிழ் ஆசிரியை மாணவ மாணவியர் தங்கள் வீடுகளிலிருந்து பள்ளிக்கு சென்று வர வசதியாக மாண்புமிகு அம்மா அவர்கள் விலையில்லா சைக்கிள் திட்டத்தை துவக்கி வைத்ததாக பேசும்போது, மேடையில் இருந்து திமுக நிர்வாகி சரவணன் ஆவேசமாக எழுந்து தமிழ் ஆசிரியையிடம் இத்திட்டத்தை மறைந்த கருணாநிதி அவர்கள்தான் துவக்கினார் என்றும்,
“நீ எப்படி மாண்புமிகு அம்மா அவர்கள் துவக்கியதாக பேசலாம்”என்று அநாகரீகமான வார்த்தைகளுடன் வாக்குவாதம் செய்து ஆசிரியை மிரட்டி உள்ளார். முக்கிய விருந்தினர்கள், பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணக்கர்கள் கலந்து கொண்டுள்ள பொது நிகழ்ச்சியில் முன் உதாரணமாக நடக்க வேண்டிய நிகழ்வில், பெண் ஆசிரியையிடம் திமுக நிர்வாகி சரவணன் ஒழுங்கீணமாக நடந்துகொண்ட இந்நிகழ்வை கடுமையாக கண்டிக்கிறேன். தொடர்ந்து திமுக-வினர் ஆசிரியர் பெருமக்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் இது போன்று அநாகரீகமாக நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. தவறிழைத்த திமுக நிர்வாகி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.