அதிமுகவை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பழனிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகாடு கிராமத்தில் உள்ள அதிமுகவை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான பழனிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2018 முதல் 2020ம் ஆண்டு முதல் ஆட்சியாக பணிபுரிந்தவர் மலர்விழி. இவர் தற்போது சென்னை அறிவியல் நகரின் துணைத் தலைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் தர்மபுரி ஆட்சியராக இருந்தபோது 251 கிராம ஊராட்சிகளுக்கு தமிழ்நாடு அரசின் ஐந்தாவது மானிய நிதி குழு மானிய நிதியிலிருந்து 20.11.2019 மற்றும் 28.04.2020 தேதிகளில் சொத்து வரி ரசீது புத்தகங்கள், குடிநீர் கட்டணம் வசூல் ரசீது புத்தகங்கள், தொழில் வரி ரசீது புத்தகங்கள் மற்றும் இதர கட்டண புத்தகங்கள் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 500 என்ற எண்ணிக்கையில் இரண்டு தனியார் நிறுவனங்களுகளில் கொள்முதல் செய்துள்ளார்.
இந்த புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் ஒப்பந்த புள்ளிகள் கோராமல் நேரடியாக இரண்டு தனியார் நிறுவனங்களிலிருந்து ரசித்து புத்தகங்களை அதிக விலைக்கு கொள்முதல் செய்ததாக ஆட்சியர் மலர்விழி 2 தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ஒரு கோடியே 31 லட்சத்து 500 ரூபாய் கையாடல் செய்ததாக தர்மபுரி மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு 05-06-2023 அன்று தர்மபுரி ஆட்சியராக இருந்த மலர்விழி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காடு கிராமத்தை சேர்ந்த அதிமுகவில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் பழனிவேல் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பழனிவேலுக்கு சொந்தமான மூன்று இடங்கள் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் பத்து இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக அதிமுகவை சேர்ந்த பழனிவேல் அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணியின் ஆதரவாக செயல்பட்டு அப்போதைய காலகட்டத்தில் தெருவிளக்குகள், ப்ளிச்சிங் பவுடர் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களை எடுத்து பார்த்து வந்ததார். அதில் முறைகேடாக சொத்துக்கள் சேர்த்து புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் திடீரென்று தியேட்டர் திருமணம் மண்டபத்துடன் கூடிய வணிக வளாகம், வீடுகள் என பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பழனிவேல் சகோதரரான முருகானந்தம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களையும், 3 சவரன் நகை, 3.70 கிலோ உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது பழனிவேலுக்கு சொந்தமான புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகாட்டில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் மூன்று குழுக்களாக பிரிந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை முடிவிலேயே என்னென்ன மாதிரியான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது தெரியவரும்.