Homeசெய்திகள்தமிழ்நாடுஆம்ஸ்ட்ராங் கொலை - அடுத்தடுத்து சிக்கும் வழக்கறிஞர்கள்

ஆம்ஸ்ட்ராங் கொலை – அடுத்தடுத்து சிக்கும் வழக்கறிஞர்கள்

-

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அதிமுக மற்றும் திமுக வழக்கறிஞர்கள் 3 பேர் கைதாகி இருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 15 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டார். பின்னர் ஹரிதரன் கொடுத்த தகவலின் பேரில், வெங்கத்தூர் கூவம் ஆற்றில் தீயணைப்புத் மற்றும் மீட்புத் துறையின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி செல்போன்களை கைப்பற்றி உள்ளனர். இதனையடுத்து கட்சிக்கு கலங்கமும் அவப்பெயரும் ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டதாக அதிமுகவில் இருந்து நேற்று மாலை நீக்கப்பட்டார். அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

 

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து வழக்கறிஞர்கள் சிக்குவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் முதலாவதாக கைது செய்யப்பட்ட திமுகவை சேர்ந்த அருள் ஒரு வழக்கறிஞர், தொடர்ந்து கைது செய்யப்பட்ட அதிமுகவை சேர்ந்த மலர்கொடியும் வழக்கறிஞர், நேற்று கைதான அதிமுக கவுன்சிலர் ஹரிதரனும் வழக்கறிஞர் ஆவார். இதையடுத்து, திருவள்ளூரைச் சேர்ந்த வழக்கறிஞர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

MUST READ