வெடி வெடித்து ஒருவர் பலி- கிணறு தோண்டும்போது நேர்ந்த சோகம்
பழனி அடுத்த வடப்பருத்தியூரில் கிணறு தோண்டும் பணியின்போது பாறைகளை தகர்ப்பதற்காக வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் தொழிலாளி உடல் சிதறி பலியானார்.
வடபதித்தியோர் கிராமத்தில் விவசாயி செல்லத்துரை என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. உடுமலையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கிணறு வெட்டும் பணியை செய்து வந்துள்ளார். கிணறு வெட்டும்போது பாறையை தகர்ப்பதற்காக வெடி மருந்துகள் வாங்கி அருகில் உள்ள குடிசையில் வைத்துள்ளனர். வெடி மருந்துகளை எடுப்பதற்காக மணிகண்டன் சென்றபோது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறி உள்ளது.
இந்த விபத்தில் மணிகண்டன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்த போது மணிகண்டன் உடல் சிதறி கிடப்பதை பார்த்து கீரனூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் அறிந்து வந்த போலீசார் சிதறி கிடந்த உடல் பாகங்களை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வெடி மருந்து எங்கு வாங்கப்பட்டது.
முறையான அனுமதியுடன் வெடி மருந்துகளை வைத்திருந்தனரா ? என்பது குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். கிணறு வெட்டும் போது வெடி விபத்து ஏற்பட்டு தொழிலாளி உடல் சிதறி பலியான சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.