கிராம சாலைகள் அமைக்க மத்திய அரசு வழங்கும் நிதி எங்கே?- அண்ணாமலை
சாலை வசதி இல்லாததால் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் அவலம். எங்கே செல்கிறது கிராம சாலைகள் அமைக்க மத்திய அரசு வழங்கும் நிதி? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், நோய்வாய்ப்பட்டு மரணமடைந்த நிலையில், அவரது உடலை, சொந்த ஊருக்கு வாகனத்தில் எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லாததால், மரக்கட்டையில் கட்டி, மலையடிவாரத்திலிருந்து தோளில் தூக்கிச் சென்றுள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். சாலை வசதி இல்லாததால், ஒரு குழந்தையின் உடலைத் தோளில் தூக்கிச் சென்ற வேதனையான செய்தி வந்து சில வாரங்களே ஆன நிலையில், மீண்டும் அதே போன்ற நிகழ்வு அரங்கேறியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.
சாலை வசதி இல்லாததால் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் அவலம். எங்கே செல்கிறது கிராம சாலைகள் அமைக்க மத்திய அரசு வழங்கும் நிதி?
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், நோய்வாய்ப்பட்டு மரணமடைந்த நிலையில், அவரது உடலை, சொந்த ஊருக்கு… pic.twitter.com/s41V5GuSrq
— K.Annamalai (@annamalai_k) June 16, 2023
தமிழகத்தில், 250 க்கும் மேல் மக்கள் தொகை இருக்கும் கிராமங்களில் எல்லாம் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய அரசுக்கு மாநில அரசு வழங்கியிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் இன்னும் பல கிராமங்களில் சாலைகள் அமைக்கப்படவில்லை என்பது, இது போன்ற துன்பகரமான நிகழ்வுகள் மூலமாகத் தெரிய வருகிறது. மத்திய அரசின் கிராம சாலை திட்டத்தில் ஒதுக்கப்படும் பெருமளவு நிதி எங்கே செல்கிறது?
தற்போதைய காலகட்டத்திலும், சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக தமிழகத்தில் சாலை வசதி இல்லாத கிராமங்களுக்குச் சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என்றும், மரணத் தருவாயிலும் மக்களை இவ்வாறு அலைக்கழிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.