நாம் தமிழர் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீஷ், அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான அதிருப்தி காரணமாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். அண்மையில் நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட செயலாளர்கள் கட்சியில் இருந்து விலகினர். நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீஷ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெகதீஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகிய தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுவரை தம்முடன் களமாடிய உண்மையான களப் போராளிகளுக்கு தனது புரட்சிகர நன்றிகளை ஜெகதீஷ் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மேலும், தான் மிகவும் நேசித்த நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவது கடினமாக இருந்தாலும், சமிப கால செயல்பாடுகள், கட்சியின் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தாதது வருத்தத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் கனத்த இயத்துடன் கட்சியிலிருந்து விலகும் அறிவிப்பை வெளியிடுவதாகவும் ஜெகதீஷ் தெரிவித்துள்ளார்.