Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரை சிறைச்சாலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

மதுரை சிறைச்சாலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

-

- Advertisement -

மதுரை மத்திய சிறையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனையில் போலி ரசீது மூலம் மோசடி தொடர்பாக  சிறைத்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குபதிவு செய்த நிலையில் மதுரை சிறைச்சாலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை.

மதுரை சிறைச்சாலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகள் மூலமாக மாஸ்க், கையுறை போன்ற மருத்துவ பொருட்கள், ஆபீஸ் கவர்கள் தயாரிக்கப்பட்டு அரசு அலுவலங்கள், நீதின்றங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அனுப்பபடுகிறது. இந்த விற்பனையில் கடந்த 2021ம் ஆண்டில் போலி ரசீது தயாரித்து பலகோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்த நிலையில் அப்போது மதுரை மத்திய சிறையில் பணியாற்றிய 9 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த புகார் தொடர்பாக தணிக்கைத்துறை அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து ஊழல் தடுப்பு இயக்குனரகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்தது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை 1 கோடியே 63 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மோசடி நடந்தது தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் மதுரை மத்திய சிறையில் முறைகேடு நடைபெற்ற நாட்களில் சிறைத்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி தற்போது கடலூர் மத்திய சிறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் ஊர்மிளா, மதுரை சிறையின் ஜெயிலராக பணியாற்றி தற்போது பாளையங்கோட்டை சிறையின் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் வசந்தகண்ணன், தற்போது வேலூர் சிறையில் நிர்வாக அதிகாரியாக உள்ள தியாகராஜன் மற்றும் மூலப் பொருட்கள் வழங்குவதில் மோசடி செய்த மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த ஜாபருல்லாகான், முகமது அன்சாரி, முகமது அலி, சென்னையை சேர்ந்த சீனிவாசன், சாந்தி, வெங்கடேஷ்வரி, நெல்லையை சேர்ந்த சங்கரசுப்பு, தனலட்சுமி உள்ளிட்ட 11 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மத்திய சிறைச்சாலையில் லஞ்ச ஒழிப்புத்துறையை சேர்ந்த இரண்டு ஆய்வாளர்கள் தலைமையில் 10க்கும் மேற்ப்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். மோசடி தொடர்பாக அலுவலக ஆவணங்களில் உள்ள தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மூல பொருட்கள் வாங்கியதில் மோசடியான பில்கள் இணைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது.

MUST READ