நீலகிரியில் சினிமா ஷூட்டிங்கிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து தாவரவியல் பூங்கா உள்பட 7 முக்கிய சுற்றுலா தலங்களில் சினிமா படப்பிடிப்பிற்க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள் கோடை சீசனாகும். அப்போது இங்கு இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்பட நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி, காய்கறி கண்காட்சிகள் என அனைத்து காண்காட்சிகளும் நடந்து முடிந்தன.
இதனிடையே கோடை சீசனை முன்னிட்டு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவும், சுற்றுலா தளங்களிலும் கண்காட்சி பணிகள் நடைபெற்றதால் உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்பட தோட்டகலை துறைக்கு சொந்தமான 7 முக்கிய சுற்றுலா தலங்களிலும் ஏப்ரல் முதல் ஜீன் மாதம் இறுதி வரை 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தோட்டகலை துறை தடைவிதித்து இருந்தது. இந்நிலையில் கோடை சீசன் நிறைவடைந்ததால் படப்பிடிப்பிற்கான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தோட்டகலை துறைக்கு சொந்தமான பூங்காக்களில் படப்பிடிப்புற்க்கு அனுமதி தேவைப்படுபவர்கள் தோட்டகலை அலுவலகத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.