ஜெயலலிதா ஊழல்வாதி- அண்ணாமலை பரபரப்பு பேட்டி
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஊழலுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர். முதல்வரே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால்தான் தமிழ்நாடு ஊழல் மிகுந்த மாநிலமாகிவிட்டது. ஊழல் செய்ததாக பல முன்னாள் முதலமைச்சர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் தமிழ்நாடு அதிக ஊழல் செய்த மாநிலமாக உள்ளது. ஊழலுக்குப் பெயர் வாங்கியது திமுக, அந்த ஊழல் கூடாரத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின். 2009ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த டி.ஆர். பாலு அமைச்சரவையில் இருந்து ஏன் நீக்கப்பட்டார் என்பதை மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.
நீட் தேர்வு வருவதற்கு முன் மருத்துவ சேர்க்கை முறைகேடு நிறைந்ததாக இருந்தது. ஏழை மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. ஆற்காடு வீராசாமியே தனியார் மருத்துவ கல்லூரிகள் பற்றி குறை கூறியுள்ளார். மருத்துவ கல்லூரிகளில் ஊழலை குறைக்கவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தே.ஜ கூட்டணி 39 சீட்களிலும் வெல்ல வேண்டும். குறைந்தபட்சம் 25 சீட்களிலாவது NDA வெல்லும் என்றே அமித்ஷா சொன்னார். தொகுதி பங்கீடு பற்றி பேச இன்னும் காலம் உள்ளது. பத்திரிக்கையில் ஆளாளுக்கு ஒரு கருத்தை பேசினால் அது சரியாக இருக்காது.” எனக் கூறினார்.