முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்க வகை செய்யும் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், ‘முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் முன்னாள் ராணுவ வீரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, https://www.exwel.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். இத்திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 விழுக்காடு மூலதன மானியமும். 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இவர்களுக்குத் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும்.
இதன்புடி, முன்னாள் படைவீரர் / விதவை / சார்ந்தோர் அடையாள அட்டை, படைவிலகல் சான்று, பகுதி II ஆணை, வயதுச் சான்று -10/12 மதிப்பெண் சான்று, வட்டாட்சியரிடமிருந்து பெற்ற வேலையின்மைச் சான்று,பிறப்பிடச்சான்று (தேவைப்படின்), திட்ட அறிக்கை, நில ஆவணங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.
மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் நாளை திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்