ஆசிரியை திட்டியதால் 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே ஆசிரியை திட்டியதால் 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அடுத்துள்ள டிஎன் புதுக்குடியில் உள்ள பிச்சாண்டி தெருவை சேர்ந்த கருப்பசாமி மாரியம்மாள் தம்பதியின் மகள் முனீஸ்வரி. இவரது தந்தை உயிரிழந்த நிலையில், தாய் கூலி வேலைக்கு சென்று வருகிறார். மாணவி முனீஸ்வரி அருகிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு சயின்ஸ் பிரிவில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் மிகவும் சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் புளியங்குடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் இறப்பு குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
பள்ளியில் மாணவி முனீஸ்வரியை உதவி தலைமை ஆசிரியை சக மாணவிகள் முன்னிலையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் காவல்துறையினர குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பள்ளிக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அப்பகுதியில் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.