குழந்தைகளின் கல்வி உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பயிற்சி சப்-இன்ஸ்பெக்டரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். இவர் திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் பயிற்சி சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். பள்ளி செல்லா குழந்தைகளை அணுகி, கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அந்தவகையில் அண்மையில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பழங்குடியினர் மக்களிடம் பரமசிவம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “யாருக்காவது உதவி தேவைப்பட்டால் என்னை காவல் நிலையத்தில் பார்க்கலாம். பள்ளிக் கட்டணம், சாப்பாடு என எந்த உதவிக்கும் என்னை அணுகலாம். கையெடுத்துக் கேட்கிறேன்.தயவு செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். 5 நாட்கள் பள்ளிகளில் முட்டையும், 2 நாட்களுக்கு பயறும் வழங்கப்படுகிறது. குழந்தைகள் படிக்க, யார் காலில் விழுந்தாவது உதவி செய்கிறேன்.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்தான் குற்றவாளி. குழந்தைகள் விஷயத்தில் நான் விடமாட்டேன். குழந்தைகளுக்கு கல்வி தர மறுப்பது, அவர்களுக்கு விஷம் கொடுப்பது மாதிரி, சமுதாயத்தை கருவறுப்பது மாதிரி. தப்பான மூட நம்பிக்கையால் மாட்டிக்காதீங்க” என்று பேசியிருந்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவத்தை பாராட்டியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “காலைச் செய்தித்தாளில் மகிழ்ச்சிதரும் செய்தியைப் படித்தேன்! பகிர்கிறேன்.குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல; நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு. குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
காலைச் செய்தித்தாளில் மகிழ்ச்சிதரும் செய்தியைப் படித்தேன்! பகிர்கிறேன்.
குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல; நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு.
குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன். pic.twitter.com/p0hQYDxbgw
— M.K.Stalin (@mkstalin) April 18, 2023
https://youtu.be/-mbYH8gvCcU