பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணைப் பிளந்தது . அழகர் ஆற்றில் இறங்கும் இந்த காட்சியைக் காண பக்தர்கள் முதல் நாளே இடம் பிடித்திருந்தனர்.
உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் இன்று அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் வழக்கம் போல் இந்த நிகழ்ச்சியில் திரண்டனர்.
அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை மாவட்ட நிர்வாகம் இன்று உள்ளூர் விடுமுறையை அறிவித்திருந்தது. இதனால் குடும்பம் குடும்பமாக அழகர் ஆற்றில் இறங்குவதை காண மக்கள் திரண்டனர் . மதுரை மட்டுமல்லாது சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து மதுரையில் மக்கள் குவிந்தனர்.
இன்று அழகர் ஆற்றில் இறங்குவதைக் காண நேற்று மதியம் முதலே மதுரையில் தென் மாவட்டங்களில் இருந்து வந்து குவிய தொடங்கி விட்டனர் பக்தர்கள். மதுரை நகர்ப்புற சாலைகள் எல்லாம் பக்தர்களின் இரவு தங்கும் இடங்கள் ஆனது. அழகர் ஆற்றில் இறங்குவதைக்காண நேற்றைய தினமே பக்தர்கள் இடம் பிடிக்க தொடங்கி விட்டனர்.
ஆழ்வார்புரம் வடகரை பகுதியில் தங்க குதிரை வாகனத்தில் அழகர் எழுந்தருளினார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை கண்ட லட்சக்கணக்கான பக்தர்களும் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்தை எழுப்ப , பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை பிளந்தது.