முன்னாள் அமைச்சர் காமராஜ் ரூ.127 கோடி ஊழல் செய்தாரா?
அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.127 கோடி சொத்து சேர்த்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது 2 மகன்கள் உள்பட 6 பேர் மீது 810 பக்க குற்றப்பத்திரிகையை திருவாரூர் நீதிமன்றத்தில் திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்துள்ளது. காமராஜின் நெருங்கிய கூட்டாளிகளான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் காமாட்சி மெடிக்கல் செண்டர் என்ற பெயரில் நவீன பன்னோக்கு மருத்துவமனை கட்டியுள்ளதாக சுட்டிக்காட்டி லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகையுடன், 18000 ஆவணங்கள் பெட்டி பெட்டியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 22 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.