மேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட முடியாது; கட்ட விட மாட்டோம்- துரைமுருகன்
டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார். அப்போது காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

மத்திய அமைச்சரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடுவதில் கர்நாடக அரசு மெத்தனமாக உள்ளது. தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு ஒன்றிய அமைச்சர் வலியுறுத்த வேண்டும். ஜூன், ஜூலை மாதத்துக்கான காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. தமிழ்நாட்டுக்கு உடனடியாக 22.54 டி.எம்.சி. நீரை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தினேன். காவரிநீர் பங்கீட்டு விவகாரத்தில் எந்த பேச்சுவார்த்தையும் பயனில்லை.

காவிரி விவகாரம் தொடர்பாக, முதலமைச்சரின் கடிதத்தை மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்திடம் வழங்கினேன். முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார் அவருக்கு மதிப்பளித்தாக வேண்டும் என ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார். மேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட முடியாது, கட்ட விட மாட்டோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.