வாரிசுகளால் தமிழகம் வளர்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை தொழில்நுட்பக் கல்லூரி பவள விழாவை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முன்னாள் குடியரசுத் தலைவர் ஏவுகணை மனிதர் என்று போற்றப்படும் ஏபிஜே அப்துல்கலாம் படித்த கல்லூரி என்பதை விட வேறு பெருமை தேவையில்லை. இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் எம்.ஐ.டி. இடம்பெறுவது தமிழ்நாட்டிற்கு கிடைக்கக்கூடிய பெருமை. அனைவருக்கும் உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வியை அளிக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். நான் அரசியல் பேசுவதாக யாரும் நினைக்க வேண்டாம், வாரிசுகள் நினைத்தால் ஒரு தலைமுறைக்கு மட்டுமல்ல, 3,4,5 என பல தலைமுறைக்கு சேவையாற்ற முடியும். வாரிசுகளால் தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர். வாரிசுகள் நினைத்தால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சேவை அளிக்க முடியும்.
அரசுப்பள்ளியில் பயின்ற பெண் பிள்ளைகளுக்காகவே புதுமை பெண் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி அறிவாற்றலிலும் முதலிடத்தை பெற வேண்டும். பன்முக ஆற்றல் கொண்ட மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே நான் முதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டது. பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்லாதவர்களையும் பள்ளி, கல்லூரிக்கு அழைத்து வருவதே அரசின் நோக்கம். தமிழகத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த மாணவர்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை அரசு வகுத்துள்ளது. சென்னை எம்.ஐ.டிக்கு ரூ.50 கோடி மதிப்பில் அதிநவீன வசதியுடன்கூடிய உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்” என உறுதி அளித்தார்.