அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு வாக்குறுதியை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு வாக்குறுதிகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளித்து ஆட்சிக்கு வந்த திரு. ஸ்டாலின், 3 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு வாக்குறுதியைக் கூட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் நிறைவேற்றவில்லை. மறாக திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய மருத்துவ சங்க நிர்வாகிகள், செவிலியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் என்று பலரை பணியிட மாற்றம் செய்தும், போராடியவர்களை கைது செய்தும் தனது கோர முகத்தை காட்டியது விடியா திமுக அரசு. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தவறியதோடு, ஒவ்வொரு அகவிலைப்படி உயர்வினையும் பலமுறை 6 மாத கால தாமதமாக அறிவித்து பணப்பயன் இல்லாமல் வழங்கியது இந்த திமுக அரசு.
இந்நிலையில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டின் நிதிநிலை சீராகும் என்ற ஸ்டாலினின் அறிவிப்பு ‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா’ என்ற சொல்லாடலை நினைவுபடுத்தும் வெறும் ‘வாய்ச்சொல்லில் வீரனடி’ என்பதை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நன்கறிவார்கள். அனைத்திந்திய அண்ணா திமுக அரசு இந்தியா அளவில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக புதிய சம்பள உயர்வை அமல்படுத்திய முதல் மாநிலம் என்பதோடு, ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அறிவிக்கும் அகவிலைப்படி உயர்வை முன்தேதியிட்டு, பணப்பயனுடன் வழங்கியது என்பதை இங்கு நினைவுகூற கடமைப்பட்டுள்ளேன்.
எனவே அஇஅதிமுக, அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் என்றும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களின் ஒருமித்த குரலாக, தமிழ்நாட்டு உரிமைகளை காத்திட இரட்டை இலைக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களிக்க வேண்டுகிறேன். தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், தபால் வாக்களிக்கும் முன்பு இந்த விடியா திமுக ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைகளை ஒரு கணம் எண்ணிப்பார்த்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.,