ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்த்தூவி மரியாதை..
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வான நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு, பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த சுழலில், அதிமுக பொதுச்செயலாளார் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை மார்ச் 22-ம் தேதி 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (மார்ச் 28) காலை நீதிபதி கே.குமரேஷ்பாபு அளித்தார். அதில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று அவர் உத்தரவிட்டார். இதன்மூலம் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியானது. இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் அவர் மரியாதை செலுத்தினார்.