- Advertisement -
தமிழகத்தில் இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கேரளா மற்றும் தென்தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், நாளை திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் திருநெல்வேலி, நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வரும் 10ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 11ஆம் தேதி கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இதேபோல், வரும் 12ஆம் தேதி திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் மிககனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.