மே 5-ல் வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23-ஆம் தேதி கொடியேற்றதுடன் துவங்க உள்ளதை முன்னிட்டு இன்று கோவில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் சாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமியும், அம்மனும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 30ந் ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், அடுத்த மாதம் 1 ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக்குவிஜயமும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் 2ந் ஆம் தேதி நடைபெற உள்ளது. அதையடுத்து 3ந் தேதி தேரோட்டம் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறும்.
இந்தநிலையில் சித்திரை திருவிழா வருவதை தெரிவிக்கும் வண்ணம் கோவில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. முன்னதாக மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து யானை, முன்செல்ல முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்து தேரடிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு மீனாட்சி அம்மன் கோவில் பட்டர்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு காலை முகூர்த்தகால் நடப்பட்டது. சித்திரை திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதேபோல் மதுரை வரும் கள்ளழகரை எதிர் கொண்டு அழைக்கும் எதிர்சேவை 4ந் தேதியும், 5ந் தேதி காலை 6 மணி அளவில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு விமர்சையாக நடைபெறும்.