வரலாற்று சாதனை- பாஜக அரசுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
நாளை நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற திறப்பு விழா, நாடு முழுவதும் கொண்டாடப்பட வேண்டிய தருணம் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நாடாளுமன்ற வளாகம் 96 வருடங்களுக்கு முன்பு கட்டமைக்கப்பட்டது. அதிகரிக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளுக்கான தேவைகள் விரிவடைந்து வருவதால், புதிய நாடாளுமன்ற வளாகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் புதிய நாடாளுமன்ற வளாகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பையும் கடந்து கட்டமைப்பு பணிகள் விரைவாக நடந்து முடிவடைந்துள்ளன. புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் மே 28- ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், “நாளை நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற திறப்பு விழா, நாடு முழுவதும் கொண்டாடப்பட வேண்டிய தருணம் ஆகும். இந்த வரலாற்று சாதனைக்காக இந்திய அரசை நான் வாழ்த்துகிறேன். நாளை ஒரு நாளாவது நமது அரசியல் மாற்றுக்கருத்துகளை மறந்து, புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவை தேசிய ஒருமைப்பாட்டின் நிகழ்வாக மாற்றுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.