Homeசெய்திகள்தமிழ்நாடுதேவர்குளம் காவல்துறை அதிகாரிகள் மீது முறையான நீதி விசாரணை நடத்த வேண்டும் - கருணாஸ்!

தேவர்குளம் காவல்துறை அதிகாரிகள் மீது முறையான நீதி விசாரணை நடத்த வேண்டும் – கருணாஸ்!

-

முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வேண்டுமென்றே வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ள தேவர்குளம் காவல்துறை அதிகாரிகள் மீது முறையான நீதி விசாரணை நடத்த வேண்டும் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை தென்மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியதாகும். முக்குலத்தோர் இளைஞர்கள் மீது பொய்வழக்குப் போடுவதும், அவர்களை அடித்துத் துன்புறுத்துவதும் பல ஆண்டுகளாக நடக்கிறது. நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்திலேயே இது நடந்திருக்கிறது. கண்டித்திருக்கிறேன். நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறேன். ஆனால் இன்றுவரை இது தொடர்ந்து வண்ணம் இருப்பதுதான் வேதனையளிக்கிறது.

அதேபோல் கடந்த இரு நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள தேவர்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கோடு வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்கிறார்கள். இந்தக் காவல்துறையினரின் தொடர்ச்சியான அதிகார அத்துமீறல்களை கண்டித்து கடந்த 09.05.2024 அன்று காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தேவர்குளம், வன்னிக்கோனேந்தல், பனவடலிசத்திரம், குருக்கள்பட்டி, சண்முகநல்லூர் உள்ளிட்ட 9 கிராம மக்கள் மீது காவல்துறையினர் மிருகத்தனமாக தாக்குதல் நடத்தியும், முறையீடச்சென்ற 50 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்திருப்பதும், காவல்துறையின் அதிகார திமிரின் உச்சம்!

தேவர்குளம் சுற்றுவட்டாரப்பகுதியில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் மற்ற மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களும் எவ்வித பிரச்சனைகளும் இன்றி இனக்கமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகிற சூழலில், காவல்துறையினர் தேவையில்லாமல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் குறிவைத்துத் தொடர்ச்சியாக வழக்குப் பதிவதும், கைது செய்வதும் முழுக்க முழுக்க உள்நோக்கமுடையதாகும். அதுமட்டுமின்றி தேவர்குள காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருகிறவர்களை நீ… என்ன சாதி என்று கேட்டுதான் அதன் பிறகு பிரச்சனையை கேட்பதாக அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள்.

சாதி உணர்வை தூண்டி.. இனக்கமாக வாழும் மக்களிடையே ஒரு பிளவை உண்டுபண்ணும் தேவர் குள காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் நோக்குடன் முக்குலத்தோர் சமூகத்தினரைக் குறிவைத்து தாக்கும் தேவர்குளம் காவல்துறை அதிகாரிகள் மீது முறையான நீதி விசாரணை நடத்தி, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினரின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியதற்காக, கைது செய்யப்பட்டுள்ள முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த 50 பேர் மீதான வழக்குகளைத் திரும்பப்பெற்று, அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

தேவர் குள காவல் நிலைய அதிகாரிகளால் ஏற்பட்டுள்ள இந்த அசாதரண சூழ்நிலையை தமிழக முதல்வர் அவர்கள் புரிந்து கொண்டு அப்பகுதியில் இனியொருமுறை எந்த வித அசாம்பாவிதங்களும் நடக்காதவாறு தமிழக அரசு அக் காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கேட்டுக் கொள்கிறேன்”. எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ