கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் – தனபால்
கோடநாடு வழக்கில் ஈபிஎஸ்ஸை விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கனகராஜ் ஆத்தூர் அருகே விபத்தில் உயிரிழந்த நிலையில், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரது அண்ணன் தனபால், “கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும். வழக்கில் எடப்பாடி பழனிசாமியை இதுவரை விசாரிக்காதது ஏன்? என தெரியவில்லை. கோடநாட்டில் கொள்ளை நடந்த நேரத்தில் தனது தம்பி கனகராஜை பெருந்துறையில் நான் சந்தித்தேன்.
தன்னை சந்தித்தபோது கனகராஜ் 5 பெரிய பைகளை வைத்திருந்தார். ஆவணங்களை எடுத்து வருமாறு எடப்பாடி பழனிசாமி கூறியதாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி கூறியதன் பெயரில்தான் 5 பைகளை எடுத்துவந்ததாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார். கோடநாடு பங்களாவில் இருந்து ஏராளமான ஆவணங்களை பையில் எடுத்துவந்தார் கனகராஜ். 3 பெரிய பைகளை சங்ககிரியிலும் 2 பெரிய பைகளை சேலத்திலும் முக்கிய நபர்களிடம் கொடுக்க இருப்பதாக கனகராஜ் தெரிவித்தார். இதனால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கனகரா தெரிவித்த நிலையில்தான் ஆத்தூரில் விபத்தில் உயிரிழந்தார்” எனக் கூறினார்.