Homeசெய்திகள்தமிழ்நாடுகிருஷ்ணகிரி அருகே ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து - 20 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து...

கிருஷ்ணகிரி அருகே ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து – 20 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்

-

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் உள்ள ஜவுளி கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின..

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியைச் சேர்ந்த சுல்தான் ஷெரிப். இவர் வேப்பனஹள்ளி நகர் பகுதியில் ஆதம் டெக்ஸ்டைல் என்ற துணிக்கடை நடத்தி வந்துள்ளார். வழக்கம் போல் இவர் நேற்றிரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை திடீரென கடையில் இருந்து புகை மூட்டம் வந்துள்ளது. இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் சுல்தான் ஷெரிப்புக்கு தகவல் அளித்தனர். இதனைத்தொடர்ந்து உடனடியாக கடைக்கு விரைந்து வந்த சுல்தான் ஷெரிப் கடையை திறந்து பார்த்த போது கடைக்குள் இருந்த துணிகள் தீ பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து ஷெரிப் உடனடியாக காவல் துறைக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க முயற்சிக்கும் முன் அதற்குளாக தீ மளமளவென கட்டினடித்தின் இரண்டாவது தளத்திற்கும் பரவியது.
இதனை அடுத்து சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பிலான புத்தாடைகள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து வேப்பனஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ