தி.மு.க. விதைக்க நினைக்கும் சிந்தனைகளுக்கான அடித்தளம்தான் தோழமை இயக்கங்கள் ஒன்றாக இருக்கும் இந்த மேடை என்றும், திமுக நூற்றாண்டைக் கடப்பதற்குள், மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம் என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழாப் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, தி.மு.க. என்ற மூன்றெழுத்தில்தான், நம்முடைய மூச்சும் – பேச்சும் – உயிரும் – உணர்வும் அடங்கி இருக்கிறதாகவும், இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க, திமுகவின் பவளவிழா சிறப்புக் கூட்டத்துக்கு வருகை தந்து வாழ்த்துகளை தெரிவித்திருக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் – நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை தொண்டன் என்ற முறையில் தன்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
மேலும் திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி மட்டும் அல்ல; வெற்றிக் கூட்டணி! என்று குறிபிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் நாம் அமைத்த கூட்டணியை பார்த்துதான் – அகில இந்திய அளவில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கான இந்தியா கூட்டணியே அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். நாம் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து கொள்கை எதிரிகளுக்கு பொறாமையாக இருப்பதாகவும், இவர்களுக்குள் மோதல் வராதா? பகையை வளர்க்க முடியாதா? என்று வேதனையில் பொய்களைப் பரப்பி – அற்பத்தனமான காரியங்களைச் செய்து, தற்காலிகமாக சந்தோஷம் அடைந்து கொள்கிறார்கள். அவர்கள் கனவு எப்போதும் பலிக்காது என்றும் முதலமைச்சர் திட்டவட்டமாக கூறினார்.
நாடாளுமன்ற – சட்டமன்ற வெற்றிக் கணக்கில் நம்முடைய அணி ஐக்கியமாகவில்லை, பாசிசத்தையும் – மதவாதத்தையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க கூடாது என்பதற்காக, ஐக்கியமாகி இருப்பவர்கள் நாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மாநிலங்களை ஒடுக்கி, ஒற்றை ஆட்சித்தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்றுவதற்கு ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தைக் கொண்டுவரப் பார்க்கிறது பா.ஜ.க. அரசு என குறிப்பிட்ட முதமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரே நாடு – ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது எனறும் தெரிவித்தார்.
இதைச் சொன்னால் – “1967 வரைக்கும் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒன்றாகத்தான் தேர்தல் நடந்தது” என்று சொல்வதாக தெரிவித்த முதலமைச்சர், அப்போது இந்திய நாட்டின் மக்கள்தொகை என்ன? இப்போது மக்கள்தொகை என்ன? அன்றைய இந்தியாவும் – இன்றைய இந்தியாவும் ஒன்றா? அன்றைய வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இன்றைய வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? என கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியாதவர்கள் – நாடாளுமன்றத் தேர்தலோடு, இந்தியாவில் இருக்கும் அனைத்துச் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவோம் என்று சொல்வது – “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் – வானம் ஏறி வைகுண்டம் காட்டுவேன்” என்று சொல்வது போன்று இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். ஒரே மதம் – ஒரே மொழி – ஒரே உணவு – ஒரே பண்பாடு – ஒரே தேர்வு – ஒரே தேர்தல் – ஒரே வரி என்று ஒரே பாட்டை பாடிக்கொண்டு இருப்பதாகவும், நடைமுறை சாத்தியமற்ற – சிக்கல் நிறைந்த பிரச்சினை இது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கும் – மக்களாட்சித் தத்துவத்துக்கும் விரோதமானது என்றும், இதனால் பல மாநில அரசுகளின் பதவிக்காலம் குறையும்! மாநிலங்களில் குழப்பம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.
நமது அரசமைப்புச் சட்டத்தின், கூட்டாட்சி முறையிலுள்ள பல ஒற்றைத் தன்மைகளை எதிர்த்துப் போரிடுகின்ற ஒரு தாக்குதல் முன்னணியாக நீங்கள் திமுகவைக் கருதிக் கொள்ளுங்கள் என்று அண்ணா முழங்கினார் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதே முழக்கத்தில், தான் சேர்த்துச் சொல்வது, அந்த தாக்குதல் முன்னணியில், திமுக மட்டுமல்ல – இங்கே இருக்கும் தோழமைக் கட்சிகளும் சேர்ந்துள்ளதாக குறிப்பிடடார். மேலும், திமுக விதைக்க நினைக்கும் சிந்தனைகளுக்கான அடித்தளம்தான் தோழமை இயக்கங்கள் ஒன்றாக இருக்கும் இந்த மேடை! என்றும், திமுக, நூற்றாண்டைக் கடப்பதற்குள், மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம் என்றும் உறுதிபட தெரிவித்தார்.