சமூக நீதிமண்ணை காவி மயமாக்க பாஜக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வகுத்த வியூகத்தினை முறியடிக்க திராவிட மாடல் ஆட்சிக்கு துணை நிற்பேன் என்று கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 90வது பிறந்தநாளை முன்னிட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, பொன்முடி மற்றும் ஜெகத்ரன்சகன் எம். பி ஆகியோரும் கி. வீரமணிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, 90 வயது என்ற அடையாளம் துவங்கினாலும், என்றும் பெரியாரின் கொள்கைகளில் அவரின் தொண்டனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
பிறந்த நாள் வாழ்த்து என்பது கொள்கை பயணத்தில் தவிர்க முடியாத முக்கியமானது. சனாதனத்திற்கு எதிரான திராவிட மாடல் ஆட்சியினை பாதுகாக்கவும் திராவிடர் கழகம் என்றும் துணை நிற்கும் என்றார்.
சமூக நீதிக்கு எதிராக வியூகம் வகுக்கப்படுகிறது. அதனை முறியடிக்கவும்,சமூக நீதி மண்ணை காவி மயமாக மாற்ற வேண்டும் என்று பாஜக , ஆர்.எஸ்.எஸ் அமைப்பு துடிக்கிறது. அதனை முறியடிக்கவும் அதற்கான முதல் ஆளாக என்னை அற்பணிக்கிறேன் என்று கூறினார்.
10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராகவும், உரிய இடஒதுக்கீட்டை இழக்காமல் இருக்கவும், சட்டப்போராட்டம் அரசு நடத்தினாலும், மக்கள் போராட்டத்தை திராவிட இயக்கம் நடத்தும் என திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்தார்.