மதுரை மீனாட்சி அம்மன் செங்கோல் விவகாரத்தில் கணவனை இழந்தோருக்கு செங்கோலை வழங்க தடை விதிக்க முடியாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு.
தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் உத்தரவு.ஆகம விதிகள் ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள் அதன் அடிப்படையில் அடுத்த வருடம் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மதுரை சேர்ந்த தினகரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், ” சித்திரை திருவிழாவின் 8 ஆம் நாள் பட்டாபிஷேகம் அன்று, செங்கோல் மீனாட்சியம்மனின் கைகளில் ஒப்புவிக்கப்படும். கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் அதை பெற்றுக் கொள்வார். ஆகம விதியின் படி திருமணம் ஆகாதவரோ, கணவன் அல்லது மனைவியை இழந்தவரோ செங்கோலை பெற்றுக் கொள்ள இயலாது.
அறங்காவலர் குழு தலைவராக இருப்பவர் ருக்மணி பழனிவேல் ராஜன். அவர் கணவரை இழந்தவர் என்பதால் ஆகமவிதிப்படி அவரிடம் செங்கோலை கொடுக்க கூடாது ஆகவே அனந்தகுல சதாசிவ பட்டர் தகுதியான நபராக இருப்பதால் அவரிடம் செங்கோலை வழங்க உத்தரவிட வேண்டும் என வழக்கு தாக்கல் செய்திருந்தேன்.
இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இது ஏற்கத்தக்கதல்ல. ஆகம விதிகளை முறையாக பின்பற்றுவது அவசியம். ஆகவே தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உரிய உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், ” கோவிலின் நிகழ்வுகளில் ஆகம விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். சீதலக்குறிப்பேடு சுவடியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது” என வாதிடப்பட்டது.அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜாரகி தனி நீதிபதியின் உத்தரவு தெளிவாக உள்ளது அதில் தலையிட வேண்டியதில்லை என வாதிட்டார்.
அதற்கு நீதிபதிகள், “அக்காலத்தில் என்ன நிகழ்ந்தது என்பது தெரியாது. நூல்களின் அடிப்படையில் நீதிமன்றம் முடிவுக்கு வர இயலாது. ஆகவே ஆகம விதிகள் என்ன? வேறு ஏதேனும் குறிப்புகள் உள்ளதா? இதனை மட்டும் தான் பின்பற்ற வேண்டுமா? இம்முறை வழக்கத்தில் இருந்ததா? என்பவை குறித்து ஒரே இரவில் முடிவுக்கு வர இயலாது. ஆகவே, இந்த ஆண்டு மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க இயலாது.
மேலும் ஆகம விதிகளில் நீதிபதிகள் நிபுணர்கள் அல்ல என்பதால் தற்போது எந்த முடிவையும் எடுக்க இயலாது.
மேலும் ஒரு மணி நேரத்தில் எந்த ஆகம விதி சரி எது தவறு என நீதிமன்றம் முடிவுக்கு வர முடியாது எனவே ஆகம விதிகள் குறித்து முறையாக அறிக்கை ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள் அதனை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் முடிவு எடுக்கலாம்.
எனவே இந்த வருடம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது ஆகவே, தனி நீதிபதியின் உத்தரவில் தடை விதிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள்.வழக்கை ஜூன் மாதம் ஒத்திவைத்தனர். இந்த ஆண்டு வழக்கம் போல் நிகழ்வை நடத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.