ரூ. 300 கோடி மோசடியில் ஈடுபட்டவர் சேலத்தில் கைது
முதலீடு செய்யும் பணத்திற்கு 20 மாதத்தில் மூன்று மடங்கு பணம் தருவதாக கூறி திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்களிடம் 300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தவரை சேலத்தில் பதுங்கி இருந்த போது பாதிக்கப்பட்டவர்கள் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து தப்பிக்க சாலையில் படுத்து உருண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மோசடியில் ஈடுபட்டவரிடம் அழகாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் ஆலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தீபக் திலக். இவர் பெங்களூரை தலைமை இடமாக கொண்டு BTM குரூப் ஆஃப் கம்பெனி என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். மேலும் சேலம், நாமக்கல், திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதன் கிளைகள் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் குறைந்த முன் பணம் 8,000 முதல் அதிகபட்சமாக 5 லட்சம் வரை முதலீடு செய்தால் 20 மாதத்தில் முதலீடு செய்த பணத்திற்கு மூன்று மடங்கு பணம் திருப்பி தரப்படும் என்றும் செலுத்தும் பணத்திற்கு முதல் கட்டமாக வீட்டு உபயோக பரிசு பொருள் வழங்கப்படும் என்றும் கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து, ஏராளமானவர்களிடம் பணத்தை பெற்றுள்ளார்.
3000 நபர்களுக்கு மேல் இதில் 300 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதலீடு செய்தவர்களுக்கு முதலில் சில மாதங்கள் மட்டும் பணத்தை திருப்பி செலுத்தியுள்ளார். அதன் பின்னர் கடந்த ஒரு வருடமாக பணத்தை வழங்காமல் திடீரென தலைமுறைவானதாக கூறப்படுகிறது. இது குறித்து திருப்பூரில் பாதிக்கப்பட்ட மக்கள் தீபக் திலக் மீது மோசடி புகார் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தீபக் திலக் சேலத்தில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் இன்று திடீரென அந்த ஹோட்டல் முன்பாக திரண்டு, அங்கு அறையில் தங்கி இருந்த
தீபக் திலக்கை பிடித்து பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.
அப்போது திடீரென அவர்களிடமிருந்து தப்பி வந்த தீபக், சாலையில் படுத்து உருண்ட படி, தன்னை எல்லோரும் அடிப்பதாக உருண்டு பிரண்டு உள்ளார். இதனை அறிந்த அழகாபுரம் போலீசார் தீபக் திலக்கை மீட்டு வந்து, தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தீபக்திலக் மீது மோசடி புகார் திருப்பூரில் உள்ளதால், அவரை திருப்பூர் போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.