உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா பின்பற்றிதான் ஆக வேண்டும் – அமைச்சர் துரைமுருகன்
காவிரியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், குறுவை சாகுபடியை சமாளிக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கர்நாடகாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு மாநிலத்தில் நடப்பதை பற்றி எதுவும் சொல்ல தாம் விரும்பவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும். உச்சநீதிமன்றம் சொல்லியதற்கு கீழ்படிய வேண்டும். ஏற்கிறார்களா? இல்லையா? என்பது அவர்களது இஷ்டம்.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பது அரசியல் நெறி, அதனை ஏற்பதும் ஏற்காததும் கர்நாடகாவின் விருப்பம். கர்நாடகாவில் விவசாயிகளின் போராட்டத்தை சமாளிக்க வேண்டியது கர்நாடகா அரசாங்கம் தான். காவிரியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், குறுவை சாகுபடியை சமாளிக்கலாம்” என்றார்.