வங்கதேசத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 61 வயது மனைவியுடன், சென்னை விமான நிலையத்தில், 3 நாட்களாக தவித்துக் கொண்டு இருந்தார்.
இந்த தகவல் கிடைத்து, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நடவடிக்கைகள் மேற்கொண்டு, வங்கதேச தம்பதியை, சென்னை பல்லாவரம் அருகே ஒரு தங்கும் விடுதியில், தங்க வைத்து, உணவு, மருத்துவ சிகிச்சைகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளார்.
இதற்கிடையே மூன்று நாட்களுக்குப் பின்பு இன்று சென்னையில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு மூன்று பயணிகள் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
வங்கதேசத்தைச் சேர்ந்தவர் சுசில் ரஞ்சன் (73). இவரது மனைவி புரோவா ராணி (61). இந்த நிலையில் புரோவா ராணி புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவியுடன் சுசில் ரஞ்சன் விமானத்தில் சென்னை வந்தார். அதன் பின்பு வேலூர் சென்று மருத்துவமனையில் மனைவியை சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் தனது மனைவியுடன் சொந்த நாடான வங்கதேசத்திற்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி கடந்த திங்கள் கிழமை பகல் 2 மணி அளவில் சென்னையில் இருந்து வங்கதேசம் தலைநகர் டாக்கா செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் மனைவியுடன் பயணம் செய்வதற்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து இருந்தார். அந்த விமானத்தில் வங்கதேசம் செல்வதற்காக திங்கள் கிழமை, காலை மனைவியுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.
ஆனால் வங்கதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக, இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், திங்கட்கிழமை மதியம் 2 மணிக்கு சென்னையில் இருந்து டாக்கா சொல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.
இதை அடுத்து இந்தக் கணவன் மனைவி இருவரும் சொந்த ஊர் செல்ல முடியாமல், சென்னை விமான நிலையத்தில் வெளிப்பகுதியில் தங்கியிருந்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி விமானத்தில் பயணம் செய்ய இண்டிகோ ஏர்லைன்ஸ் கவுன்டர் சென்றபோது, நேற்றும் விமானம் ரத்து என்று அறிவித்தனர். இதை அடுத்து இந்த வங்கதேச தம்பதியினர், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருந்தனர். அதோடு அவருடைய மனைவி மிகவும் நோய் வாய்ப்பட்டு, ஆபத்தான நிலையில் இருந்தார்.
இந்த தகவல்கள் ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள், பத்திரிக்கைகளின் ஆன்லைனில் வெளியானது.
இதை அடுத்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உடனடியாக, இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு, அந்த வங்கதேச தம்பதிகளுக்கு உரிய தங்கும் வசதி, உணவு, மருத்துவ சிகிச்சை அளிக்கும் படி கேட்டுக் கொண்டார்.
இதை அடுத்து நேற்று இரவு 10 மணியளவில், வங்கதேச மூத்த குடிமக்கள் ஆன தம்பதி, சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில், பல்லாவரம் பகுதியில் தங்கும் விடுதி ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதோடு அவர்களுக்கு உணவு ஏற்பாடுகளும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுசில் ரஞ்சன் மனைவிக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று சென்னையில் இருந்து வங்கதேசம் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இயக்கப்படுகிறது என்ற தகவல் வந்ததை அடுத்து, பல்லாவரம் தங்கும் விடுதியில் தங்கியிருந்த, வங்கதேச தம்பதி, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, விமானத்தில் பயணம் செய்வதற்கான போர்டிங் பாஸ், மற்றும் பாதுகாப்பு சோதனைகள் ஆகியவைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர். இன்று பகல் 2 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், இந்த வங்கதேச தம்பதி டாக்கா புறப்பட்டு செல்கின்றனர்.
இதற்கிடைய வங்கதேசத்திற்கு சென்னையில் இருந்து கடந்த மூன்று தினங்களாக ரத்து செய்யப்பட்டு இருந்த, விமான சேவைகள் இன்று மீண்டும் தொடங்குவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் அறிவிக்கின்றனர். இன்று 1.50 மணிக்கு சென்னையில் இருந்து டாக்கா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பகல் 2 மணிக்கு சென்னையில் இருந்து டாக்கா செல்லும் பி எஸ் பங்களா ஏர்லைன்ஸ் விமானம், பிற்பகல் 2:40 மணிக்கு, சென்னையில் இருந்து டாக்கா செல்லும் பீமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஆகிய மூன்று விமானங்கள் இன்று இயக்கப்படுகின்றன.