Homeசெய்திகள்தமிழ்நாடுசிறைகளில் கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு புதிய கட்டுப்பாடு!

சிறைகளில் கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு புதிய கட்டுப்பாடு!

-

தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை, வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு தமிழக காவல் துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இதற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடியான நாகேந்திரன் சிறையில் இருந்துகொண்டே, அவரது மகனும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதும், கொலையை அரங்கேற்றியது விசாரணையில் வெளியானது. இதில் பல வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சிறையில் இருந்து ரவுடிகள், வழக்கறிஞர்கள் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்களா? என்பன உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்

குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 396 வழக்கறிஞர்கள், 84 ரவுடிகளை 1,987 தடவை சந்தித்ததாக தெரியவந்துள்ளது. சிறை கண்காணிப்பாளர் ஆய்வுசெய்து உரிய அனுமதி அளித்தால் மட்டுமே வழக்கறிஞர்கள் தங்கள் வாதிகள் ஆன கைதிகளை சந்திக்க அனுமதிக்கப்படும். சந்திக்கும் வழக்கறிஞர்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு மட்டுமே கைதிகளை சந்திக்க வேண்டும். இதில் சில வழக்கறிஞர்கள் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை கதிகளுக்கு கொடுப்பதாக தெரியவந்துள்ளது.

புழல் சிறை

மேலும் சில வழக்கறிஞர்கள், ரவுடிகளை சந்தித்து கட்டப்பஞ்சாயத்து போன்ற விவகாரத்தில் உதவுவதாகவும், மிரட்டி சொத்துக்கள், வாங்குவதற்கு உடந்தையாக இருப்பது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு வழக்கறிஞர்கள் கைதிகளுடன் சேர்ந்து ஒருங்கிணைந்த குற்றங்கள் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டபூர்வமான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், இது வழக்கறிஞர்கள் தொழிலுக்கு எதிரானது எனக் கூறி இந்த சுற்றறிக்கையை திரும்பப் பெறுமாறு கூறி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது.

MUST READ