தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலை திருவிழாவில் பொள்ளாச்சி ஆலாங்கடவு கிராம பகுதியை சேர்ந்த தொடக்கப்பள்ளி மழலைகள் மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.
ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்களுக்கு கொடுக்கப்படும் முதல் மரியாதை போல் போல் கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்து வந்து கௌரவிக்கப்பட்ட தொடக்கப்பள்ளி மாணவர்கள்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 2024- 25 ஆண்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கலைத் திருவிழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு சுற்றுகளைத் தாண்டி பொள்ளாச்சி ஆலங்கடவு கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இதனை அடுத்து சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான நடைபெற்ற போட்டியில் மூன்று பிரிவுகளில் முதலிடம் பிடித்தனர்.
38 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற போட்டியில் கிராமிய நடனம், மாறுவேட போட்டி மற்றும் நாட்டுப்புற குழு நடனம் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்ற பொள்ளாச்சி ஆலாங்கடவு ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கி உள்ளார்.
இதனை அடுத்து இன்று சென்னையில் இருந்து சொந்த கிராமத்திற்கு திரும்பிய அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களைப் போல அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் கொண்டாடப்பட்டு, ஆலாங்கடவு கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழுவினர் இணைந்து முதல் மரியாதை செய்து, மாலை அணிவித்து ஊர்வலமாக கிராமம் முழுவதும் சுற்றி அழைத்து வந்தனர்.
அலங்கரிக்கப்பட்ட வண்டியில், மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து 10 வயதிற்குட்பட்ட மாணவர்கள் கையில் வெற்றி பெற்ற பரிசுகளுடன் கிராமப் பகுதியில் வலம் வந்தனர். அவர்களுக்கு ஆரத்தி எடுத்து பள்ளிக்கு குழுவினர் கௌரவப்படுத்தினர்.
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் தொடக்கக் கல்விப் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கலைத் திருவிழா மூலம் பல்வேறு கிராமப்புறத்தைச் சேர்ந்த மழலை மாணவர்கள் தங்களது கலைத்திறனை வெளிப்படுத்த வாய்ப்பு அமைந்துள்ளதாகவும், இந்த முன்னெடுப்பின் மூலம் பல கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்வார்கள் என பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.