செங்கல்பட்டு அருகே ஓழலூரில் அரசு பள்ளி மாணவர்கள் காரில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் பகுதியைச் சேர்ந்த வேலன் (31). ஆர்த்தி (30). இவர் ரக்சிதா (11) என்ற மகளும், நித்தின் (7) என்கிற மகனும் உள்ளனர். வேலன் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வரும் நிலையில், ஆர்த்தி செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து வேலனின் அரவணைப்பில் குழந்தைகள் இருவரும் இருந்துள்ளனர். இதில் குழந்தைகள் இருவரும் ஒழலூர் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் படித்து வந்ந்துள்ளனர். இந்நிலையில் சிறார்கள் இருவரும் இன்று வழக்கம் போல பள்ளிக்குச் சென்றுள்ளனர். இதில் பள்ளியின் மதிய உணவு இடைவேளையின் போது, காரில் வந்த ஒரு ஆண் ஒரு பெண் என இருவர் பள்ளியின் தலைமை ஆசிரியர் எழிலரசியிடம் சென்று தான் வேலனின் தங்கை என்றும், நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்துள்ளதால் குழந்தைகளை காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் குழந்தைகளை பார்ப்பதற்கு அனுமதித்துள்ளார். தொடர்ந்து சிறிது நேரத்தில் ஆசிரியரின் அனுமதியின்றி அங்கிருந்து ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் சேர்ந்து வேலனின் குழந்தைகளான ரக்சிதா, நித்தின் ஆகிய இருவர் காரில் கடத்தி சென்றுள்ளனர். இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் வேலனின் குடும்பத்தினருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அந்த நேரம் பார்த்து பள்ளிக்கு வந்த வேலனின் உறவினர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, வேலனின் மனைவி ஆர்த்தி தனது குழந்தைகளை அழைத்துச் சென்றாரா? அல்லது வேறு யாராவது கடத்திச் சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.