முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஓர் ஆண்டுகளுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்கள் சென்னை முதன்மை அமர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மதிய உணவு சாப்பிட்ட பின், நெஞ்சு வலிப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து முதலுதவி செய்த சிறை மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதனையடுத்து அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறைத்துறை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இதில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மீண்டும் சிறைக்கு கொண்டு வரப்படுவார் என சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.