
17 மணி நேர சோதனைக்கு பிறகு தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், நள்ளிரவில் சென்னையில் கைது செய்து விசாரணைக்காக, காரில் அழைத்துச் சென்றனர். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
“பா.ஜ.க. அச்சுறுத்தல்களுக்கு எதிர்க்கட்சிகள் அஞ்சாது”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
அவருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில், இஎஸ்ஐ மருத்துவர்களும் பரிந்துரைச் செய்துள்ளனர். இதையடுத்து, அமைச்சருக்கு அறுவைச் சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் செய்து வருகின்றனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கு இன்று (ஜூன் 14) மாலை 04.00 மணிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் ஜூன் 28- ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
“செந்தில் பாலாஜி மீது நடவடிக்கைக் கோரியவர் மு.க.ஸ்டாலின்”- அண்ணாமலை பேட்டி!
அப்போது நீதிபதியிடம், இருதரப்பு வழக்கறிஞர்களும் பேச முயன்றனர். அதற்கு நீதிபதி, வாதங்களை நீதிமன்றத்தில் வைத்துக் கொள்ள இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் அறிவுறுத்தியவர், செந்தில் பாலாஜியின் உடல்நிலைக் குறித்து விசாரிக்கவே மருத்துவமனைக்கு வந்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
நீதிபதியின் இந்த உத்தரவு மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.