ராமேஸ்வரத்திலிருந்து சென்னை சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்தது. அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டபோது ரயில் இன்ஜினில் இருந்து 3 பெட்டிகள் திடீரென கழன்று தனியே சென்றன.
இதனை கவனித்த லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். ரயில் நிலையத்தில் இருந்து இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால் உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சேது எக்ஸ்பிரசில் இருந்து பிரிந்து சென்ற பெட்டிகளை மீண்டும் ரயிலுடன் இணைத்தனர். இதனை அடுத்து, சுமார் 30 நிமிடம் தாமதமாக சேது எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. இதனால் திருச்சி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.