தமிழகத்தின் புதிய டிஜிபி சங்கர் ஜிவால்! முழு விவரம்
தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1990ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சங்கர் ஜிவாலின் சொந்த மாநிலம் உத்தரகாண்ட். பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் அதில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம் மற்றும் உத்தரகாண்டின் தாய்மொழியான குமானி மொழியில் பேசும் புலமை பெற்றவர். இன்ஜினியரிங் படிப்பு முடிந்ததும் சங்கர்ஜிவால் செய்ல் (ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா), பெல் (பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்) நிறுவனத்திலும் சிறிது காலம் இன்ஜினியராக பணிபுரிந்தவர். அதன்பின்பு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார்.
சேலம் எஸ்பி, மதுரை எஸ்பி, மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவான மண்டல இயக்குனர், திருச்சி போலீஸ் கமிஷனர், உளவுப்பிரிவில் டிஐஜி மற்றும் ஐஜி, சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி ஆகிய முக்கியப்பதவிகளில் சங்கர்ஜிவால் பணியாற்றியவர். அயல்பணியாக மத்திய அரசில் 8 ஆண்டுகள் பணிபுரிந்த இவர் பின்பு தமிழகம் வந்து அதிரடிப்படை ஐஜியாக நியமிக்கப்பட்டார். மெச்சத்தகுந்த பணிக்காக 2 முறை ஜனாதிபதி பதக்கம் பெற்றவர்.
ஏடிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் சென்னையின் 108-வது காவல் ஆணையராக கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார். அதன் பின்னர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற சங்கர் ஜிவால் சென்னை காவல் ஆணையர் பொறுப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியை தொடர்ந்தார். சென்னை காவல் ஆணையராக டிஜிபி சங்கர் ஜிவால் இருந்த போது சென்னையில் குற்றங்களை குறைக்கவும், சாலை விபத்துகளை தடுக்கவும் 131 திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். குறிப்பாக முதல் சிறார் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் பறவை திட்டம், டிரைவ் அக்கைன்ஸ்ட் டிரக்ஸ் திட்டம், dare, சாலை விபத்துகள் தடுக்கும் திட்டம், ஹாப்பி ஸ்டீர்ட்ஸ், சைபர் லேப், சிற்பி, ஆனந்தம், ஒருங்கிணைந்த சிசிடிவி கட்டுப்பாட்டு அறை, போன்ற பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள், மோட்டார் வாகன திருத்த சட்டம் ஆகியவைகளை சிறப்பான முறையில் அமல்படுத்தியதில் சென்னை காவல் துறைக்கு பாராட்டை பெற்று தந்தார். இவரது காலத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் வந்தே பாரத் ரயில் துவக்க நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்த போது பாதுகாப்பு பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதாக அனைவராலும் பாராட்டு கிடைத்தது. மேலும் இவரது பதவி காலத்தில் பட்டப்பகலில் பெட் வங்கியில் 20கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளையடிக்க சம்பவம், தலைமை செயலக காலனி மற்றும் கொடுங்கையூரில் லாக் அப் மரணங்கள் போன்ற சில சர்ச்சைக்குரிய சம்பவங்களும் அரங்கேறியது.