ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 10 மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. அண்மையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டனர். இதேபோல் காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்த மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு, டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனத்தை பதிவு செய்திருந்தது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த 10 மீனவர்கள் இன்று அதிகாலை விசைப்படகில் ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 10 மீனவர்களையும் கைது செய்துள்ளது. மேலும் அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து பிடிபட்ட மீனவர்களை மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்துச்சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.